Pages

Saturday, April 28, 2012

வியர்க்குருவை விரட்ட வெள்ளரி


ஒருவருக்கு வியர்த்தல் என்பது ஆரோக்கியமான நிகழ்வே. ஆனால், தற்போது கொளுத்தும் வெயிலினால் ஏற்படும் அதிகப்படியான வியர்வையால், பெரும்பாலானவர்கள் வியர்க்குரு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.
முதுகு, கழுத்து அல்லது தலை போன்ற பகுதிகளில் தோன்றும் வியர்க்குருக்கள் அரிப்பை உண்டாக்கும்.

* கோடை காலத்தில் வியர்க்குரு தோன்றாமல் இருக்க அடிக்கடி குளிக்க வேண்டும். குளிக்கும் போது மூலிகையினால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை பயன்படுத்துவதே சிறந்தது.

* வெள்ளரிக்காயை வெட்டி, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 முதல் 20 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறைகள் செய்யலாம். இதை வியர்க்குரு மறையும் வரை தொடர்ந்து செய்யலாம்.

* சோற்றுக் கற்றாழை ஜெல்லை, வியர்க்குருவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்தால், நாளடைவில் குணமாகும்.

* வியர்க்குரு தோன்றியுள்ள பகுதிகளில், சாமந்தி பூவின் சாறு தடவினால் குணமடையும். சாமந்தி பூவை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட பவுடர்கள் மற்றும் ஆயின்மென்ட் போன்றவையும் கடைகளில் கிடைக்கின்றன.

* அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், அதிக நறுமணம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுவதை தவிர்ப்பதே நல்லது.

* மூலிகைகளின் சாறுகளால் தயாரிக்கப்பட்ட தன்வந்த்ரம் தைலத்தை உடலில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இவ்வாறு தொடர்ந்து மூன்று வாரங்கள் செய்து வந்தால் வியர்க்குரு மறைந்து விடும்.

மழை நேரத்திலும் கவனம்…

பல இடங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும், சில பகுதிகளில் பருவமழைக் காலம் துவங்கி விட்டது என நிம்மதி பெருமூச்சு விடுகிறீர்களா? மழைக்காலத்தில் கவனமாக இருக்கவில்லை என்றால், பல நோய் தொற்று ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது. அப்படி தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பது அவசியம்.

பருவமழைக்காலத்தில் ஏற்படும் பொதுவான நோய் தொற்றுகள்:

வயிற்றுப் போக்கு, டைபாய்டு, காலரா, வைரஸ் ஹெப்படைட்டிஸ் மற்றும் சீதபேதி போன்றவையே, பருவ மழைக் காலத்தில் ஏற்படும் பொதுவான நோய்த் தொற்றுகள். உலக சுகாதார மையத்தின் தகவல் படி, இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு, 97 லட்சம் பேர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுகின்றனர். இதில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், இத்தகைய தொற்று நோயால் ஆண்டுக்கு ஐந்து லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் குழந்தைகளே அதிகம் என்பது வருத்தம் தரும் விஷயம். மேலும், பருவ மழைக்காலத்தில் நமது சுற்றுப்புறத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரால், கொசுக்களின் எண்ணிக்கை பெருகி, மலேரியா, டெங்கு போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவற்றை எல்லாம் தடுக்க வேண்டும் என்றால், அதற்கு சில நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

குடும்பத்தினர் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்:

* சாப்பிட செல்வதற்கு முன்னும், கழிவறைக்கு சென்று வந்த பின்னும் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும்.

* நாம் குடிக்க பயன்படுத்தும் குடிநீரை நன்கு கொதிக்க வைத்த பின்னரே அருந்த வேண்டும். தண்ணீரை 2 முதல் 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்தால் தான், கிருமிகள் முழுவதுமாக அழியும்.

* வீட்டை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ளுவது அவசியம். இதன் மூலம், மலேரியா மற்றும் டெங்கு போன்ற தொற்று நோய்களை பரப்பும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகாமல் தடுக்க முடியும்.

* ஹெப்படைட்டிஸ் “ஏ’ மற்றும் டைபாய்டு போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை முறையாக போட்டிருப்பது அவசியம்.

No comments:

Post a Comment